நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 14
சனிக்கிழமை
இணையத்தில்
சோழ தேசத்தின் தனிப்பெரும் வைபவமான ஏழூர் திருவிழாவின் முதல் நாள் (சித்திரை விசாகம் 25/4)..
ஸ்வாமியும் அம்பாளும் நந்தீசன் சுயம்பிரகாஷிணி தேவியுடன் திரு ஐயாற்றில் இருந்து புறப்பட்டு திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதிகுடி தலங்களில் தரிசனப் பேறு தந்தருளினர்..
கால சூழ்நிலையினால் ஒவ்வொரு தலத்திலும் சற்றே கூடுதல் நேரம் இருக்க வேண்டியதாகின்றது..
அந்த வகையில் நள்ளிரவுக்குப் பிறகு தான் ஐந்து பல்லக்குகளும் திருக் கண்டியூர் வீரட்டானத்தை வந்தடைய இருக்கின்றன - என்று சொல்லப்பட்டது..
ஆயினும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் கோயில் திருச்சுற்றில் காத்திருந்தனர்..
காலையில் இருந்தே அன்பர்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெற்றிருக்கின்றது.
மூலஸ்தானத்தில் ஈசன் வெள்ளிக் கவசத்துடன் அருள்பாலிக்க அன்னை மங்களாம்பிகை சந்தனக்காப்பு அலங்காரத்துடன் திகழ்ந்தாள்..
கண்டியூர் வீரட்டான தரிசனம் கண்டு இரவு பத்து மணியளவில் இல்லம் திரும்பினோம்..
ஒளிப்படங்கள் - தஞ்சையம்பதி..
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டியூர் எம் பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரானல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே.. 4/93/9
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***